கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று “ஒரு கோடி ரூபாய்” வரை வசூலித்து மோசடி.!!
பழைய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில் பேசிய இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசிய இளைஞர், இது போன்று சாகக்கிடக்கும் நோயாளிகளுக்கு நேரடியாக நாங்கள் களத்திற்குச் சென்று உதவி செய்கிறோம் என பேசியிருந்தார். அதை நம்பிய பலர், அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு, கூகுள் பே ஆகியவற்றில் நன்கொடையை செலுத்த தொடங்கினர். இந்தக் கும்பலை நம்பிய சல்மான் என்ற தொழிலதிபர் 45 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
3 நாட்களில் சுமார் ஒரு கோடி வரை பணம் வசூல் செய்த இளைஞர்கள் கும்பல் தங்களுக்கள் பணத்தை பிரித்துக் கொள்வதில் சண்டை போட்டுள்ளனர். அதேசமயம், தாங்கள் கொடுத்த பணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்பதை நன்கொடை கொடுத்தவர்கள் விசாரிக்க சென்றபோது, அவர்களையும் அக்கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து, சந்தரையான்குட்டா காவல்நிலையத்தில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட சல்மான்கான், அகமது மொய்தீன் ரஷித், அஸ்ரா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது மோசடிக் கும்பல் எனத் தெரிந்து கொண்ட பிறகு, புகார்கள் குவிந்துவருவதால், நாம்பள்ளி உள்ளிட்ட 6 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரக்க குணம் கொண்டவர்களைத் தவறாகப் பயன்படுத்திய இந்தக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா நிதிஉதவி என்ற பெயரில் யார் கண்ணீர் விட்டாலும், உதவி செய்யும் முன்பு, வசூல் செய்யும் கும்பலின் விபரங்களை சரி பார்ப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.