கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் ஆகியோர் நடிப்பில் கன்னடத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியானது கேஜிஎஃப் திரைப்படம். பிரம்மாண்டமான வசூல் சாதனையை பெற்ற இந்த திரைப்படம் கன்னடத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதிலும் வெற்றியைக் குவித்தது.
இதனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை படக்குழு அறிவித்தது. அதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே கடந்த 8ஆம் தேதி நடிகர் யாஷின் பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் மில்லியன் லைக்குகளையும் பல கோடி வியூவ்ஸ்களையும் இந்த டீசர் தாண்டியது. இப்படி டீசர் வெளியான ஒரே நாளில் இப்படியான லைக்ஸ்களையும் வியூவ்ஸ்களையும் பெற்ற இந்தியாவின் முதல் பெரும் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது. அண்மையில் ஜூலை 16ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தான் படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று நடிகர் யாஷின் ரசிகர்கள் பிரதமருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை இணையவழியில் எழுதி இருக்கிறார்கள். அந்த கடிதம் வெளியாகி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அந்த கடிதத்தில், “மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, ஜூலை 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.எனவே படம் வெளியாகும் அன்றைய தினத்தில் தேசிய விடுமுறை அளிக்குமாறு கோருகிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல எங்கள் எமோஷன்” என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.