இந்தியாதமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம்..முழு அடைப்பு போராட்டம்..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் விவசாயிகள் தங்கள் விழைபொருட்களை விற்பனை செய்ய அதிக வாய்ப்புகளை அளிக்கும் எனவும், நாடு முழுவதும் விவசாயிகள் தடையின்றி தங்கள் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய இனி எந்த தடையும் இல்லை என தெரிவித்தது.

மேலும், ஏற்கனவெ மாநில அரசுகளால் நடத்தப்படும் மண்டி அமைப்பிடம் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அரசு அமைப்பிடம் விற்பனை செய்யப்படுவன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது.

ஆனால், தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் மாநில அரசுகள் நடத்தும் மண்டி அமைப்பிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தனியாரிடமும் நேரடியாக வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதனால், மண்டி அமைப்பு முறை அழிந்து அந்த அமைப்பு மூலம் உறுதி செய்யப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை தடைபட்டுவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து தனியார் நேரடியாக வாங்குவதால் இடைத்தரகர்களின் இடையூறுகள் இல்லாமல் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என மத்திய அரசு வாதம் செய்கிறது. ஆனால், மத்திய அரசின் இந்த சட்டங்களால் வேளாண் துறை தனியாரிடம் செல்வது மட்டுமல்லாமல் விவசாயிகள் தனியார்கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிலை உருவாகும் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்ப்பெறக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்ப்பெறக்கோரி விவசாயிகள் சார்பில் இன்று (8-ம் தேதி) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டது.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜம்முகாஷ்மீரின் குப்கர் கூட்டணி, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

அந்த வகையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது முதலே எதிர்க்கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்களும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் பந்த் – ஐ ஆதரிக்கும் வகையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புல்டனா மாவட்டத்தில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.