ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத நிலையில், மறுபக்கம் பறவை காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில், கேரளா அரசு அதை மாநில பேரிடராக பிரகடனம் செய்துள்ளது.
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி, தக்கலை, பள்ளிபாட், கருவட்டா ஆகிய பஞ்சாயத்து பகுதிகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் நீந்தூர் பஞ்சாயத்திலும் அதிகமாக காணப்படுகிறது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணையில் சுமார் 1700 வாத்துகள் இறந்துள்ளன. குட்டுநாடில் மட்டும் 34 பறவைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் கேரள அரசு பறவை காய்ச்சல் மாநில பேரிடர் என பிரகடனம் செய்துள்ளது. இதற்கிடையில் ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை விற்பனை செய்ய தடைவிதித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.