இந்தியாதகவல்கள்

வீடு தேடி வரும் பணம் ! வாங்கிக்கோ ஏ.டி.எம் மையத்திற்கோ செல்ல வேண்டாம் ..தபால்துறையின் சூப்பராணா சேவை !!

கொரோனா ஊரடங்கிலும் தபால்துறை தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 50 சதவிகித அளவில் இயங்கிவந்த தபால் நிலையங்கள், நேற்று முதல் நாடு முழுக்க முழுவதுமாக இயங்கி வருகின்றன. அவசியத் தேவைக்குத் தபால் நிலையம் செல்ல முடியாதவர்களுக்கு வீடுதேடிவந்து சேவை வழங்குகின்றனர். தபால் துறை மூலமாகவே, வீட்டில் இருந்தபடியே வங்கிச் சேமிப்புக் கணக்கிலுள்ள பணத்தையும் பெற முடியும். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவும் தபால்துறை சேவைகள் குறித்து, சென்னை மண்டல இயக்குநர் (அஞ்சல் மண்டலத்தின்) கோவிந்தராஜனிடம் பேசினோம்.

தபால் நிலையம்

“ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு எங்களுடைய துறை அவசியமாகிறது. எனவே, கொரோனா ஊரடங்கிலும் எங்கள் சேவை தடைப்படவில்லை. மூத்த குடிமக்கள் பலரும் தபால் நிலையம் மூலம் ஓய்வூதியம் பெற்றுவருகின்றனர். ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாமல் அவர்கள் சிரமப்பட்டால், எங்கள் உதவி மைய எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அவர்களின் வீட்டுக்கே சென்று பணத்தைக் கொடுப்போம். ஊரடங்கால் வங்கிக்கோ ஏ.டி.எம் சென்டருக்கோ சென்று பணம் எடுக்க முடியாமல் சிரமப்படும் யார் வேண்டுமானாலும் எங்கள் உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

‘இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ என்ற திட்டத்தின் கீழ், தபால்துறை மூலமாகவே அவர்கள் பணம் பெற்றுக்கொள்ள முடியும். ஒருநாளில் 500 முதல் 10,000 ரூபாய் வரை பெற முடியும். இந்தச் சேவையை ஒருநாளிலேயே பெறலாம். இந்தச் சேவையைப் பெற ஒருவருக்கு நாட்டில் பிரபலமான எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கு இருக்கலாம். அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

‘இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ திட்டம்

தபால் ஊழியர் நேரடியாக வீட்டுக்கே சென்று, செல்போன் செயலி மூலம் அந்த நபரின் கைரேகை மற்றும் செல்போன் ஓ.டி.பி எண் ஆகியவற்றைச் சரிபார்த்தப் பிறகுப் பணத்தைக் கொடுப்பார். இந்த சேவை கடந்த ஓராண்டுகாலமாகவே வழங்கப்படுகிறது. ஆனால், தற்போதைய ஊரடங்கு நேரத்தில்தான் மக்களிடம் பிரபலமாகிவருகிறது” என்பவர், மக்கள் அன்றாட தபால் நிலைய சேவைகளை எளிதாகப் பெறுவதற்கு ஆலோசனை கூறுகிறார்.

“தபால் அனுப்புவது மற்றும் பெறுவது, தங்களது சேமிப்புத் திட்டத்தில் பணம் செலுத்துவது மற்றும் பெறுவது போன்ற எல்லா வழக்கமான தபால்துறை சேவைகளையும் வழக்கம்போல் மேற்கொள்ளலாம். தற்போது வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. கார்கோ உள்ளிட்ட சிலவகை விமானங்கள் இயங்குவதால், வெளிமாநில பகுதிகளுக்கு அனுப்பும் கடிதங்களை மட்டும் விரைவுத் தபால் (Speed Post) முறையில் அனுப்பவே மக்களை வலியுறுத்துகிறோம். தபால் நிலையம் செல்வதற்குச் சிரமம் இருந்தால், முடிந்தவரையில் மக்களின் வீடு தேடிவந்துகூட கடிதங்களைப் பெறுவோம்.

கோவிந்தராஜனின் கூற்று

தங்களின் அருகிலுள்ள தபால் நிலையத்தைத் தொடர்புகொண்டு மேற்சொன்ன சேவைகளைப் பெறலாம். அல்லது எங்கள் உதவி மைய எண்ணைத் தொடர்புகொண்டாலும் அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுவோம். எங்கள் சேவைகளைப் பெற 044 – 28545531, 9941163765, 9894881575 ஆகிய எண்களைத் தமிழக மக்கள் யார் வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்” என்றார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.