“தீவிரவாதிகள் ஊடுருவல்” – தாக்குதல் நடக்கலாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!
ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று ஓராண்டு முடிவடைய உள்ளது. மேலும் அன்றைய தினம் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா அயோத்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
தாக்குதல் நடத்த பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீர், நேபாள் எல்லை வழியாக ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் சுதந்திர தின கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ள செங்கோட்டையிலும் இந்தியா கேட், நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களிலும் இரவு முதல் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.