
கொரோனா ஊரடங்கால் , போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து , போக்குவரத்து சேவைகள் தொடங்கிய பின்பு , ஆம்னி பேருந்து பயண கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.
1 கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்து சேவை இயக்கப்படும் என அறிவித்திருந்தது.மேலும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது. அதேபோல ஆம்னி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டது. முக்கியமாக தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளது.
அப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பட்சத்தில் ஆம்னி பேருந்துகளில் 20 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதேபோல படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் தற்போது 15 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.இதனால், 50 சதவிகித பயணிகளுடனே பேருந்துகள் இயக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், பயணிகளின் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



