இந்தியாவில் கொரோனா பரவல் தீயை விஞ்சும் வேகத்தில் நாள்தோறும் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஜனவரி இறுதியில் இந்தியாவுக்குள் நுழைந்த கொரோனா, அடுத்தடுத்த மாதங்களில் வேகமெடுத்து தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 32,34 ,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15,00,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,00,000-ஐ கடந்துள்ளது, அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,059 பேர் இந்தியாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 329 பேர் மகாராஷ்டிராவிலும், 148 பேர் கர்நாடகாவிலும் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரேநாளில் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது.
இதே வேகத்தில் இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்தால், ஒருவாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது நாடாக இந்தியா உருவெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தற்போது இந்தியா 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் பாதிப்பு விகிதம் 10 விழுக்காடாக இருக்கும் நிலையில், புதுச்சேரியில் பாதிப்பு விகிதம் 43 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 1,327 பேரில், 571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்பில் 69 சதவிகிதம் ஆண்களே என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.