தகவல்கள்

வைஃபை டெபிட் கார்டுகளை சுருட்டி, 10 லட்சம் ரூபாய் திருடிய ஆசாமி..!

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ஹரிவிஸ்வநாத். இவர் கடந்த மாதம் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜூலை மாதம் 29ஆம் தேதி தனது வைஃபை டெபிட் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தனது கார்டை பயன்படுத்தி 15,000 ரூபாய் வரை பணம் எடுத்துள்ளதாக கூறியிருந்தார். அதன் பிறகு அந்த கார்டை வங்கியில் கூறி பிளாக் செய்து விட்டதாகவும் புகாரில் ஹரிவிஸ்வநாத் கூறியிருந்தார். இந்த புகார் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. தனிப்படைகள் அமைத்து டெபிட் கார்டிலிருந்து பின் நம்பர் இல்லாமல் பணம் எடுத்தது யார் என போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

பண பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்கு எண்ணை வைத்து பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கே.கே. நகரை சேர்ந்த 28 வயதான சரவணன் என்பவரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் காதல் திருமணம் செய்துகொண்டு தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது குழந்தைக்கு பிறக்கும் போதே இதய பிரச்னை இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதற்காக தன்னிடமிருந்த பணம் முழுவதையும் செலவு செய்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால் நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.

சரவணன் தனது நண்பரின் பெயர், முகவரியில் கிரெடிட், டெபிட் கார்டு ஸ்வைப்பிங் மெசின் ஒன்று வாங்கி உள்ளார். ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று அங்கு வாடிக்கையாளர்கள் மறந்து தவற விட்டுச் செல்லும் வைஃபை டெபிட் கார்டுகளை எடுத்துச் செல்வார். 1999 ரூபாய் வரை எடுக்க பின் நம்பர் தேவைப்படாததால், அந்த கார்டை தனது ஸ்வைப்பிங் மெசின் அருகே காட்டி 1999 ரூபாய் அடிப்படையில் அந்த கார்டில் உள்ள பணம் முழுவதையுமோ, அல்லது பிளாக் செய்யும் வரையோ எடுத்துவிடுவார்.

இதுபோல் பலரின் டெபிட் கார்டுகளை எடுத்து வந்து இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை எடுத்து இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மனைவி மற்றும் நண்பர்களிடம் தனது வங்கி கணக்கில் இருந்து மற்றவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதால் தனக்கு கமிஷன் அடிப்படையில் பணம் வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். சரவணனிடம் இருந்து 12 வைஃபை டெபிட் கார்டுகள் மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஏடிஎம்மில் தவறவிட்ட டெபிட் கார்டுகளை மட்டும்தான் எடுத்து சரவணன் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டாரா அல்லது டெபிட் கார்டுகளை திருடி மோசடியை அரங்கேற்றினாரா என விசாரித்து வருகின்றனர். மேலும், சரவணன் இதுபோன்ற வேறு ஏதும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.