வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவர்கள் தனிமை முகாம்களில் 14 நாட்களுக்கு தங்க வைக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு உறுதியாகாத பட்சத்தில், வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் மலைப்பகுதியை ஓட்டியுள்ள தனிமை முகாம்களில் பாம்பு உள்ளிட்டவை நுழைந்து விடுவதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநில தனிமை முகாமில் 6 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனிமை முகாமில் எறும்பு தின்னி பிடிபட்டது. அந்த பெண் எறும்பு தின்னிக்கு தற்போது 5 வயது இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எறும்பு தின்னி கொரோனா தனிமை முகாமிற்கு எப்படி வந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து எறும்பு தின்னிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எறும்பு தின்னி காட்டிற்குள் விடப்படும் என தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் எறும்பு தின்னிகள் மற்றும் வவ்வால்களில் இருந்து பரவியிருக்கலாம் என சில ஆய்வு முடிவுகள் கூறுவதால் தனிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எறும்பு தின்னிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொரோனா தனிமை முகாம்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.