சிங்கப்பூரில் CARE தொடர்பு எண் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆனா நிலையில் சுமார் 6,600க்கும் அதிகமானோர் அதைத் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனவால் வீட்டிலேயே முடங்கி இருப்பவர்களுக்கு ஏற்படும் குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சினை, மனநல ஆறுதல்,பதற்றம் தொடர்பான கவலைகள் குறித்து அவர்கள் தொடர்புகொண்டதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு ஆலோசனை வழங்க சுமார் 500 தொண்டூழியர்கள் முன்வந்துள்ளதையும் அமைச்சர் சுட்டினார்.
ஒவ்வோர் அழைப்பும் தனித்துவமானது என்றும், இந்தச் சூழலில் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி அது விளக்குவதாகவும் அவர் கூறினார்.
இக்கட்டான இந்த நிலையிலிருந்து மீண்டு வர மனநலம் முக்கியம் என்றார் திரு. லீ. மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் உறவினர்கள், நண்பர்கள் பற்றித் தெரியவந்தால் அவர்களை 1800-202-6868 என்ற CARE உதவி எண்ணுக்கு அழைக்க ஊக்குவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.