வியட்நாமில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் இந்திய தொல்லியல் துறையினரால் கண்டுபிடிப்பு..!
வியட்நாமில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட பெரிய சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வியட்நாமின் மை சன்னில் அமைந்துள்ள சாம் கோயில் வளாகத்தில் ஒற்றைக மணற்கல் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டு
இந்த அகழாய்வில் ஈடுபட்டுள்ள இந்திய ஆய்வு குழுவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சுப்பிரமணியம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை (ஏ.எஸ்.ஐ) பாராட்டினார். ஏ.எஸ்.ஐ அமைப்பை பாராட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள சிவபெருமானின் பக்தர்களுக்கிடையில் ஒரு ‘நாகரிக தொடர்பை’ மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார். அகழ்வாராய்ச்சியிலிருந்து புகைப்படங்களை ட்வீட் செய்த அவர், 2011 ஆம் ஆண்டு அவர் வியட்நாம் சென்றதை நினைவுகூர்ந்தார்.
கோவில் சரித்திரம்
இந்த கோவில் வளாகம் 9 ஆம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சியின் போது கட்டப்பட்டது. குவாங் நாம் மாகாணத்தில் புகழ்பெற்ற டோங் டுவோங் புத்த மடாலயத்தையும் இவர் தான் கட்டினார். 1903-1904 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வல்லுநர்கள் இந்த கோவில் வளாகத்தை பாழடைந்த நிலையில் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது, பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் கோவில் இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக கூறினர். இருப்பினும், அந்த நேரத்தில் குறைந்த அகழ்வாராய்ச்சி திறன் காரணமாக, அதை மீட்டெடுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, வியட்நாமில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும் போர்களும் கோவில் வளாகத்தை மேலும் அழிக்க வழிவகுத்தன.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வு
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் உள்ள உலக பாரம்பரிய தளத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) 4 பேர் கொண்ட குழு, மறுசீரமைப்பு / பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது நான்காம் பருவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய மூன்று பருவங்களில், ஏ.எஸ்.ஐ குழுக்கள் ‘கே’ மற்றும் ‘எச்’ கோயில்களில் ஆராய்ச்சி செய்தனர். தற்போது ‘ஏ’ குழுவில் உள்ள கோயில்களுக்கான பணிகள் நடந்து வருகின்றது.