பேஸ்புக் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.
உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக வாங்கி நிர்வகித்து வரும் இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து பரிசீலினை செய்ய அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்டிசி) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.
பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.