இரண்டாவது தலைநகர் விவாதம் கொரோனா பிழைகளை திசைதிருப்பும் முயற்சியா?
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல், தொலை மாவட்டத்தினரின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருச்சியைத் தலைநகராக்க எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்தார். இதன்தொடக்கமாக திருச்சி அண்ணா நகரில் ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வும் நடைபெற்றது. திருச்சி உறையூரில் எம்.ஜி.ஆருக்காக தனி பங்களாவும் உருவானது. பயன்பாடின்றி அந்த பங்களா இப்போதும் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் திருச்சியில் தலைநகரம் என்கிற திட்டம் நிறைவேறாமல் போனது. ஆனால் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2-வது தலைநகரம் குறித்த விவாதம் தற்போது எழுந்துள்ளது.
ஆனால், இப்போது மதுரையில் அமைய வேண்டும் என்று அமைச்சர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான ஆதரவையும் திரட்டி வருகின்றனர். ஆனால், திருச்சியில் அமைவதே பொருத்தமாக இருக்கும். அதுவே எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் என்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து எந்த மாவட்டத்திற்கும் சுமார் 5 மணி நேரத்திற்குள் சென்று விடலாம். விமான, ரயில், சாலை வழிப் போக்குவரத்து வசதிகள். தேவைக்கு கிடைக்கும் நீர்வளம், நில வசதி என தலைநகர் அமைவதற்கேற்றவை திருச்சியில் உள்ளன.
அதே நேரத்தில் கொரோனா தொற்று, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்க, திசைதிருப்பும் முயற்சியாக தற்போது மதுரையில் தலைநகரம் என்று பேசப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது என்று மக்கள் சக்தி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நீலமேகம் உள்ளிட்டோர் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் 2வது தலைநகரம் என்பதை அரசியல் ரீதியில் பார்க்காமல், புவியியல் ரீதியிலும் தேவையின் அடிப்படையில் அணுக வேண்டும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, இதுகுறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். விவாதங்களுக்கு துவக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.