இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”வின் 41வது பிறந்தாள்.
இளையராஜாவின் இளைய மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இளையராஜாவின் இசை ஆற்றல் அவரது மகன் கார்த்திக் ராஜாவிடம் அதிகம் உள்ளதாக திரைத்துறையினர் சிலாகித்தாலும், இளையராஜாவிடம் இருந்து நேரடியாக எதையும் கற்றுக் கொள்ளாமலே தேர்ந்த இசையமைப்பாளராக உருவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் யுவன் சங்கர் ராஜா.
தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. யுவனின் 50-வது திரைப்படமான பருத்தி வீரன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரும் பலமாக இன்றளவும் பாராட்டப்படுகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போன்ற பெரும் நடிகர்களுக்கு நிகராக தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இசையமைப்பாளர்களில் யுவன்சங்கர்ராஜா முக்கியமானவர். அண்மையில் நேர்கொண்டபார்வை ரிலீஸின்போது யுவன் சங்கர் ராஜாவிற்காக தனியாக பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டது அவரது ரசிகர்கள் கொண்டுள்ள அன்புக்கு சாட்சி.
காதல், சோகம், காதல் தோல்வி என ஏராளமான உணர்வுகளை ரசிகர்கள் நினைவில் நிறுத்தியதில் யுவனின் பங்கு அபரிமிதமானது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்துள்ளார் யுவன்சங்கர்ராஜா 23 ஆண்டுகள் கடந்து விட்டாலும் தன்னுடைய ஒப்பற்ற இசையால் இன்னும் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும் இசை உலகின் இளவரசனுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.