சென்னை : மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தமிழக இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் கலந்தாய்வை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று துரோகம் செய்த மத்திய அரசு, தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என அறிவித்திருப்பது ஏன்?
தனி நுழைவுத் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்கள், OBC (BC & MBC) மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.2000. ஆனால் EWS மாணவர்களுக்கு ரூ.1500 என்பன அநீதிகளின் உச்சகட்டம்!
முதுநிலை மருத்துக் கல்விக்கான சேர்க்கையில், தனி இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்றவர்கள் தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கும் முரண்பாடு ஏன்?
மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும்!
தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையும் 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிட அனுமதித்திட வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.