6 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் பத்திரப்பதிவு அதிகரிப்பு…
பத்திரப்பதிவுத்துறையின் மூலம் ஆண்டுக்கு 12 ,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அறிவித்த பின் பத்திரப்பதிவுத்துறையில் வருவாய் பெருமளவு சரிந்தது.மாதம் சுமார் 700 கோடி வருவாய் வந்த துறையில் கடந்த ஏப்ரல் வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே ஆன்லைன் பத்திரப்பதிவு மூலம் வருவாயாக வந்தது. ஆனால் மே மாதத்தில் 300 கோடி ரூபாயும், ஜூனில் 655 கோடி, ஜூலையில் 644 கோடி ரூபாய் என மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2, 17,000 பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும், இதன் மூலம் 793 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்டை விட 7 கோடி ரூபாய் அதிகமாகும்.மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.