சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஆர் வி நகர் 6-வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் புண்ணியகோட்டி (65). தனது மனைவி இந்திரா மற்றும் மகள் ஆதிலட்சுமி என்பவருடன் வசித்து வந்துள்ளார். ஆதிலட்சுமியை ரவுடி தினேஷுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடி தினேஷின் நண்பர் கணேஷ் குற்றச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதை தனக்கு சாதகமாக்கிய ரவுடி தினேஷ். கணேஷின் மனைவி சபிதா( 21) என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு தனியாக வீடு எடுத்து தங்க வைத்துக்கொண்டு அவருடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் கடந்த ஒருவார காலத்திற்கு முன்பு சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ரவுடி தினேஷ் கைதுசெய்து சிறை அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறைக்கு சென்ற கணேஷ் வெளியே வந்து தனது மனைவி சபிதாவை தேடினார். ரவுடி தினேஷூடன் தனது மனைவிக்கு கள்ளக்காதல் உள்ளதை தெரிந்து கொண்டு ரவுடி தினேஷ் சிறைக்கு சென்றுவிட்டதால் அவரது மாமனார் வீட்டில் மனைவி சபிதா இருப்பார் என நினைத்து ஜாபர்கான் பேட்டையில் உள்ள ரவுடி தினேஷின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமனார் சரிவர பதில் கூறாததால் ஆத்திரமடைந்த கணேஷ் கத்தியை எடுத்து தாறுமாறாக தலையில் வெட்டி படுகொலை செய்தார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ரவுடி தினேஷின் நண்பர் கணேஷை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், ரவுடி தினேஷ் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.