“பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” – கல்லூரியை அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!
ஆக்ராவில் இயங்கி வரும் பிரபல கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14ம் தேதிக்குள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி மாணவிகள் பாய் ஃபிரண்ட் இல்லாவிடில் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று விசித்திர நோட்டீஸ் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆக்ராவில் உள்ள அந்த பிரபல கல்லூரியின் பெயரில் வெளியான இந்த நோட்டீசில் அந்த கல்லூரியின் லோகோ பதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த கல்லூரியின் லெட்டர் பேடில் பேராசிரியர் ஆஷிஷ் சர்மா என்கிற பெயரில் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நோட்டீசில் தான் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு பாய் ஃபிரண்டாவது இருக்கவேண்டும். மாணவியின் பாதுகாப்பு கருதி பாய் ஃபிரண்டுடன் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய வேண்டும்.
சிங்கிளாக வரும் மாணவிக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. மாணவிகள் தங்கள் பாய்ஃபிரண்டுடனான சமீபத்திய புகைப்படத்தையும் காண்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அன்பை பகிருங்கள் என்று அந்த நோட்டீஸ் முடிவு பெறுகிறது. வாட்ஸ் அப்பில் பரவி பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நோட்டீஸ். கல்லூரி மாணவிகளிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கிய இந்த நோட்டீஸ் பற்றி சில மாணவிகள் பெற்றோரிடம் கூற தயங்கியதாகவும் கூறப்படுகிறது.